முகப்பு
சொத்துக்களை அபகரிக்க தொழில் அதிபர் கடத்தல்.. உயிரோடு மீட்டது எப்படி..! மதுரையில் நடந்தது என்ன ?
Apr 20, 2025 01:16 AM
377
சொத்துக்களை அபகரிக்க தொழில் அதிபர் கடத்தல்.. உயிரோடு மீட்டது எப்படி..!
மதுரையில் கடத்தப்பட்ட ஆட்டோ மொபைல் தொழில் அதிபரை இரு வாரங்கள் கழித்து போலீசார் உயிரோடு மீட்டுள்ளனர். திண்டுக்கல் மற்றும் குற்றாலத்தில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
மதுரையில் பாரம்பரியம் மிக்க செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த ஆட்டோ மொபைல் தொழில் அதிபர் 60 வயதான கருமுத்து டி.சுந்தரம். மாநகர் பீ.பி.குளம் அருகேயுள்ள நாராயணபுரம் குருநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல நூறு ஏக்கர் சொத்துக்கள் உள்ளது.
கருமுத்து டி.சுந்தரத்தின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த பல கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் நிலத்தை திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கீழமை நீதிமன்றத்தில் கருமுத்து டி.சுந்தரத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் மரியராஜ், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அங்கும் கருமுத்து சுந்தரத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மரியராஜ் , சுந்தரத்தின் சொத்துக்களை மிரட்டி அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நண்பர்களின் உதவியுடன் தென்காசியை சேர்ந்த ரமேஷ், காரைக்குடியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அழகு சுந்தரம், மயிலாடுதுறையை சேர்ந்த கிரிவாசன் ஆகியோர் வீட்டில் இருந்த கருமுத்து டி.சுந்தரத்தை பேச்சுவார்த்தை நடத்துவது போல கூறி அழைத்துச்சென்று காரில் கடத்தி சென்றனர்.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் ஹார்டிஸ்க்குகளையும் வீட்டில் இருந்து எடுத்துசென்றதாக கூறப்படுகின்றது. உறவினரான பெரியகருப்பன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார், கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ் , மயிலாடுதுறை அருள்செல்வன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ் , நாகப்பட்டினம் ஜெனமேந்திரன், தென்காசி அருள் ஆகிய 6 பேரை மயிலாடுதுறையில் வைத்து கைது செய்தனர். அங்கு சுந்தரம் கிடைக்கவில்லை அவரை வேறு ஒரு காரில் ஏற்றி தப்பிச் சென்றது தெரியவந்தது.
சுந்தரத்துடன் தப்பிய கடத்தல் கும்பலின் கார், மகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா பெங்களூர் போன்ற மாநிலங்களில் சுற்றிவந்ததை செல்போன் சிக்னல் மூலம் அடையாளம் கண்டு, தனிப்படை காவல்துறையினர் பின்தொடர்ந்தனர். கடத்தல் கும்பலானது வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தருமபுரி , சேலம் திருச்சி வழியாக மதுரை நோக்கி திரும்பியது
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் மதுரை பாண்டி கோவில் அருகே வந்த கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற அழகு , மயிலாடுதுறையைச் சேர்ந்த கிரிவாசன் ஆகிய இருவரும் பாலத்தில் இருந்து குதித்து தப்பியோடியபோது இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த காரில் இருந்து கருமுத்து டி. சுந்தரத்தை பத்திரமாக மீட்டனர்.
இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu