முகப்பு
விமானத்தில் உயிர்தப்பி ஓடிவந்த எக்ஸ் பிரதமர் ஆஜர்படுத்த உத்தரவு.. 1,400 உயிர்கள்; பகையே காத்திரு!.
Jun 04, 2025 10:43 AM
72
ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்தால் எதையும் அடக்கி, ஒடுக்கிவிடலாம் என ஆணவக்கணக்குப் போட்ட, வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பித்து ஓடிவந்தாலும், அவரது குற்றத்துக்கான தண்டனை ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... 1,400 உயிர்கள்...பகையே காத்திரு’ என அவரை துரத்த ஆரம்பித்திருக்கிறது. அதாவது, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, ஜூன் 16 ஆம் தேதி, ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது, வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்.
ஒரு பிரதமரே தனது நாட்டைவிட்டு தனிவிமானத்தில் உயிர் தப்பி ஓடிவந்ததன் காரணம் என்ன? 1,400 உயிர்கள் கொல்லப்பட்டது ஏன்? ஜூன் 16 ஆம் தேதி அவரை தீர்ப்பாயத்தின் முன் ஆஜர்படுத்துமாறு வங்கதேச அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அளவுக்கு, மனிதகுலத்திற்கு எதிராக, ஹசீனா செய்த குற்றங்கள் என்ன? என்பது குறித்த பின்னணிகளை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
2024 ஆகஸ்ட்- 5 ஆம் தேதி... “உங்கள் மீது கோபமடைந்த ஒரு கும்பல் உங்கள் இல்லத்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டிக்கிறது. உங்களது உயிருக்கு ஆபத்து. உங்களது, அதிகாரப்பூர்வ கணோபபன் இல்லத்தை காலி செய்ய, 45 நிமிடங்களே அவகாசம்” என ஷேக் ஹசீனாவிற்கு, பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால், ஷேக் ஹசீனா ராணுவ விமான தளத்திற்கு தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் சென்றார். பின்னர், ஒரு விமானப்படை விமானம், அவரை ஏற்றிக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அவர், கணோபபன் இல்லத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே, பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுக்கூறிய அந்த கும்பல், ஷேக் ஹசீனாவின் வீட்டை ஆவேசமாக அடித்து, உடைத்து சேதப்படுத்தியது. ஆக்ரோஷம் அடங்காத கும்பல் அவரது, தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட, தண்மணியிலுள்ள அவரது இல்லமான, பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் அமைந்திருந்த கட்டிடத்தையும் தீ வைத்து கொளுத்தியது.
ஏன் இந்த ஆக்ரோஷம்? யார் அவர்கள்? இவ்வளவு வெறிகொண்டு தாக்குதல் நடத்தியதன் பின்னணி என்ன? அதாவது, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சர்ச்சைக்குரிய அரசாங்க வேலை இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக, மாணவர்கள் தலைமையிலான போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. அதில், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாகவும் முன் வைக்கப்பட்டது.
காரணம், அவரது கிட்டத்தட்ட 15 ஆண்டுகால ஆட்சியின் போது ஊழல், சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் மற்றும் நியாயமற்ற தேர்தல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2024 ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, ஷேக் ஹசீனாவின் நிர்வாகத்தால் போராட்டக்காரர்கள் மீதான திட்டமிடப்பட்ட அடக்குமுறையின் போது, கிட்டத்தட்ட மாணவர்கள் உட்பட 1,400 வங்காளதேசியர்கள் கொல்லப்பட்டனர், என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் இதை உறுதிபடுத்தியுள்ளது. அதுவே, அவருக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டமாகவும் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி திங்கட்கிழமை, ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்துதான் அவர் தனது சகோதரியுடன் விமானத்தில் தப்பிக்க ஆரம்பித்தார். 5 ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில், தாழ்வாகப் பறக்கும் விமானம் ஒன்று, இந்தியாவை நோக்கி வருவதைக் கண்டது, இந்திய விமானப்படை. அந்த விமானத்தில் வருவது யார்? என்ற தகவல் விமானப்படை வீரர்களிடம் இருந்ததால், விமானம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது.
அவர் பயணித்த விமானம், இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு, சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை ஹெலிபேடில் தரையிறங்கியது. அங்கிருந்து, திங்கட்கிழமை மாலை உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் அருகில் டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹிண்டனில் உள்ள இந்திய ராணுவ விமான தளத்தில் தரையிறங்கினார். தற்போது, டெல்லியில் உயர் பாதுகாப்பு பகுதியில் ஒரு பாதுகாப்பான வீட்டில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது.
ஹசீனா உயிர் தப்பி ஓடிவந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நாட்டின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தநிலையில்தான், ஹசீனா உயிர் தப்பிய பத்து மாதங்கள் கழித்து சர்வதேச தீர்ப்பாயத்தின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமலையும் கைது செய்ய ஐ.சி.டி வாரண்டுகளை பிறப்பித்துள்ளது. முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல் மாமுன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம்,இந்தியாவிடம் முறையான கோரிக்கையை அனுப்பியது.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் தஜூல் இஸ்லாம் கூறுகையில், “மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர், கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஷேக் ஹசீனா நேரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது, எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஹசினா தான் அரசின் தலைவர் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” எனக்கூறியதுடன் அதுகுறித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். மே 12 ஆம் தேதி சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையினைத் தொடர்ந்து, தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. மேலும் துண்டித்தல், தூண்டுதல், உடந்தையாக இருத்தல், வசதி செய்தல், சதி செய்தல் மற்றும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியமை" ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல நாட்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின்அவாமி லீக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் தடை செய்த சில வாரங்களுக்குப் பிறகு, ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் வெளி வந்துள்ளன. யூனுஸ் நிர்வாகத்தின் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உடனடித் தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரின்போது, பாகிஸ்தான் ராணுவத்தால் செய்யப்பட்ட குற்றங்களை விசாரிக்க 2009 ஆம் ஆண்டு ஹசீனாவால், இந்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இது பல முக்கிய அரசியல் எதிரிகளுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், ஹசீனா தனது போட்டியாளர்களையும் எதிரிகளையும் ஒழிப்பதற்கான ஒரு கருவியாக இந்த தீர்ப்பாயத்தை பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்டது. அதே தீர்ப்பாயம்தான், தற்போது அவரை மனித குலத்துக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஜூன் - 16 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு, கெடு விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu