பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
BIG STORIES
நீக்கப்பட்ட இரும்புத்திரை. போலீசாரின் அதிரடி ஆபரேசன்.. 136 பேர் அதிரடி கைது..!
Jun 06, 2025 01:22 AM
60
நீக்கப்பட்ட இரும்புத்திரை. போலீசாரின் அதிரடி ஆபரேசன்.. 136 பேர் அதிரடி கைது..!
தமிழகத்தில் கடன் செயலி மற்றும் அதிக லாபம் ஈட்டும் முதலீடு என்று ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த 136 பேரை 48 மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 'ஸ்பெஷல் ஆபரேசன்' மூலம் ஆன்லைன் அபேஸ்காரர்களின் இரும்புத்திரை நீக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழகத்தில் பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை சுற்றி வளைக்கவும் திரை நீக்கு என்ற பெயரில் சைபர்கிரைம் போலீஸார் அதிரடி ஆபரேசன் ஒன்றை மேற்கொண்டனர்.
இதில் ஆன்லைனில் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி கேட்டு புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு பணம் பறிக்கும் கும்பல், அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காண்பித்து ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் கேடிகள், திருமணத்துக்கு பெண் இருப்பதாக புகைப்படங்களை பதிவிட்டு வரன் தேடும் குடும்பத்தினரிடம் பணம் பறிக்கும் மேட்ரிமோனியல் மோசடி கும்பல் ஆகியவற்றுக்கு குறிவைக்கப்பட்டது.
மேலும் பிட் காயினில் முதலீடு செய்யுங்கள் என்று பணம் பறிக்கும் கும்பல், இந்த லிங்க்கை தொட்டால் உங்களுக்கு உடனடியாக பணம் பரிசாக கிடைக்கும் என்று வங்கி கணக்கில் இருந்து பணம் களவாடிய கும்பல், வங்கி கடன் அட்டைகளில் இருந்து மோசடியாக பணம் சுருட்டும் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் குறித்து பதியப்பட்ட 159 வழக்குகளை ஒரே ஆபரேசனில் தட்டித்தூக்க முடிவு செய்தனர்.
ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு விசாரணையை மிக நுட்பமாக மேற்கொண்ட தமிழக சைபர் கிரைம் போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் திருடப்பட்ட பணம் எந்தெந்த வங்கி கணக்குகள் மூலம் கைமாறி இருக்கின்றது என்பதை முதலில் கண்டறிந்தனர். அந்த பணத்தை எந்தெந்த ஏடிஎம்களில் இருந்து எடுத்துள்ளனர் என்பதை வைத்து அந்த வங்கிக் கணக்கு விவரங்களை தேசிய சைபர் குற்ற பிரிவின் உதவியுடன் கேட்டுப் பெற்றனர்.
அதனை வைத்து திரை மறைவில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த 'ஒயிட் டெவில்'களை போலீசார் அடையாளம் கண்டனர். ஆபரேசன் திரை நீக்கு-2 மூலம், கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதியில் மொத்தம் 48 மணி நேரத்தில் மட்டும் 136 பேரை தட்டி தூக்கி கைது செய்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார்.
இவர்கள் 30க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகளை மோசடிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த ஆன்லைன் மோசடி கும்பலின் பின்னணியில் செயல்பட்ட 6 பேர் கொண்ட குழுவும் கைது செய்யப்பட்டது.
இந்த ஆன்லைன் அபேஸ்காரர்களிடம் இருந்து 125 செல்போன்கள், 304 வங்கி கணக்கு புத்தகங்கள், 88 காசோலைகள், 107 டெபிட் கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது இணைய வழி குற்றத்தில் கைதானவர்களிடமிருந்து டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, இந்தியா முழுவதும் பரவியுள்ள மோசடியாளர்களின் விவரங்களை கண்டு பிடிக்க முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
கடந்த டிசம்பர் மாதம் 6,7,8 ஆகிய நாட்களில் ஆபரேஷன் திரைநீக்கு - 1 மூலம் மாநிலம் முழுவதும் 75 சைபர் க்ரைம் கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
மக்களிடம் பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துங்கள் எனக்கூறும் மாநில சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு போலீசார், பொது வெளியில் இலவசமாக வைஃபை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணைய வழி மோசடிகள் குறித்து உதவி எண் 1930 ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர். பணம் பறிபோய்விட்டது என்று தவிப்பதை விட்டு தைரியமாக புகார் அளித்தால் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டும் என்று தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu