தமிழ்நாடு
“அன்புள்ள ‘திருட்டு’ அப்பா உன்போல் யாருமே இல்லை...” சொந்தக்காரர் போல விழாக்களுக்கு வரும் தந்தை - மகன்; ஜாக்கிரதை!
Jun 10, 2025 01:03 PM
784
விழாக்களுக்கு வரும் தந்தை - மகன்
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்பது திருக்குறள். அதாவது, ‘தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்’ என்பது இதன் பொருள்.
ஆனால், இங்கே ஒரு தந்தை என்ன செய்திருக்கிறார், தெரியுமா? தான் கற்றதை, மக்கள் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்க செய்வதாக நினைத்து, அவர் செய்த செயலால், மகனையும் தன்னுடன் சேர்த்து கம்பி எண்ண வைத்திருக்கிறார். அப்படி, என்ன செய்தார்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
“ஏம்பா... அந்த வாழமரத்தை கட்டியாச்சா? கட் -அவுட் பேனர்ல்லாம் வெச்சாச்சா? இலையெல்லாம் வந்துடுச்சா? சமையல் காரர் வந்துட்டாரா? காய்கறி எல்லாம் வந்து இறங்கிடுச்சா?” என இந்த ஒட்டுமொத்த திருமண வேலைகளையே இழுத்து போட்டுக்கொண்டு செயல்படுவதுபோல், செல்ஃபோனில் பிஸியாக உலாவிக்கொண்டிருப்பவர்தான், திருமண விழாக்களை குறித்துவைத்து திருடுவதற்காக தனது தந்தை பாலமுருகனுடன் ட்ரெயினிங் எடுக்க வந்த பயிற்சி திருடர், ஹரி கிருஷ்ணன்...
திருமண மண்டபத்திற்குள் மகனை அழைத்து வந்து, தந்திரமாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு பைக்கில் தப்பித்ததோடு, சி.சி.டி.வி. காட்சிகளில் அடையாளம் தெரியாமல் இருக்க, பழனிக்கு சென்று மொட்டை போட்டு கெட்டப் சேஞ்ச் எல்லாம் செய்து வந்த, அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிப் போய் நிற்கும் தந்தை -மகனின் ஃப்ளாஷ் பேக் இதுதான்....
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதியரின் திருமணம், கடந்த 2025 ஜூன் -6 ஆம் தேதி முத்துக்காளிப்பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் சொந்தம் பந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்ற நிலையில், மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 26 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் திருட்டுப் போனதாக திருமண வீட்டார், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
புகாரை பெற்ற ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், ராசிபுரம் ATC டிப்போ அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது பாலமுருகன் மற்றும் அவரது மகன் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சியில் உறவினர் போல கலந்துகொண்டு, மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல், செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட சுமார் இருபத்தி ஆறரை பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர்.
காவல்துறையிடம் சிக்காமல் இருக்க பழனிக்கு சென்று மொட்டை அடித்துவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், தந்தை -மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தந்தை, மகன் ஆகிய இருவரும் கல்யாண நிகழ்ச்சிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், இவர்கள் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் கொள்ளையடித்த புகார்களில் தொடர்பு இருப்பது, தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“உன் திருட்டு பழக்கத்தை உன் மகனுக்கும் கற்றுக்கொடுத்து அவனையும் திருடனாக்கிட்டியே... அதுவும் திருடுவதற்கு மகனையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்கியே? உன்னை மாதிரி ஒரு அப்பன் இந்த உலகத்துல இருப்பானா?” என்றபடி, கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள், ராசிபுரம் போலீஸார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu