கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு இன்ஸ விரித்த காதல் வலை...தீராத விளையாட்டு கண்ணனின் லீலைகள்..
Jun 11, 2025 10:40 AM
236
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், 4 மாததிற்கு முன்பு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு செய்வதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.
அப்போது, இரவுப் பணியிலிருந்த விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட இன்ஸ்பெக்டர் கண்ணன், தினமும் அந்த இளம் பெண்ணுக்கு காலையில் ‘குட்மார்னிங்..’ இரவில் ‘குட் நைட்’ என வாழ்த்து மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில், “எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது, தனியாகத்தான் உள்ளேன். உனக்கு விருப்பம் என்றால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம்’’ என கொக்கி போட ஆரம்பித்துள்ளார், இன்ஸ்பெக்டர் கண்ணன்.
அவரது தூண்டில் பேச்சில், அந்த இளம் பெண் மயங்க ஆரம்பித்துள்ளார். பிறகு, இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படி, அடிக்கடி சந்திக்கும்போதெல்லாம், இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், இன்ஸ்பெக்டர் அந்த இளம் பெண்ணின் தொடர்பை துண்டிக்க ஆரம்பித்துள்ளார்.
இவர்களுக்குள் நடந்த பிரச்சனை, இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு தெரியவர, வீட்டில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இளம் பெண்ணிடம் தனக்கு விவாகரத்து ஆகவில்லை என கூறியுள்ளார்.
மேலும், “எனது மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாகத்தான் வசிக்கிறேன். எனவே, நீ என்னை தொந்தரவு செய்யாதே” என கூறியுள்ளார், இன்ஸ்பெக்டர். அதற்கு, அந்த இளம்பெண்ணோ, “மனைவியை பிரிந்து வாழ்வதாகக் கூறி பொய் சொல்லிவிட்டு, என் வாழ்க்கையை சீரழிச்ச உன்னை எப்படி சும்மா விடமுடியும்?” என கோபப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், இளம்பெண்ணின் குடும்பத்தாரை மிரட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இன்ஸ்பெக்டருக்கு பயந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு, மயிலாப்பூரிலுள்ள வீட்டில் குடியேறியுள்ளனர்.
ஆனாலும் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இன்ஸ்பெக்டரை எதுவுமே செய்யமுடியவில்லையே? என வேதனை அடைந்த அந்த இளம்பெண், இன்ஸ்பெக்டரை மீண்டும் தொடர்புகொண்டு நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அவர் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டரின் கார் ஓட்டும் காவலர்களையும் தொடர்புகொண்டும் எந்த பயனும் ஏற்படவில்லை.
இதனால், அந்த இளம்பெண், ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து, ராமாபுரத்தில் வசித்துவரும், விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். சாதாரண மனிதர்கள் மீது புகார் அளித்தாலே கண்டுகொள்ளாத போலீஸார், ஒரு இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தால் உடனே சிங்கம் போலீஸ் போல் சீறி எழுந்து, ஆக் ஷனில் இறங்கிவிடுவார்களா, என்ன? இளம்பெண் கொடுத்த புகாருக்கு சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில், இளம்பெண் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம், புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களுடன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இணை கமிஷனர் விசாரணை நடத்துவதற்காக, இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்துள்ளார்.
ஆனால், இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகாமல் நைஸாக மருத்துவ விடுப்பு என்கிற பெயரில் எஸ்கேப் ஆகி சென்றுவிட்டார், என கூறப்படுகிறது. இதனால், இணை கமிஷனர், இன்ஸ்பெக்டரை விசாரணை முடியும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதன்படி உயர் அதிகாரிகள் விசாரணையில், இன்ஸ்பெக்டர் கண்ணன், இளம் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி நெருக்கமாக இருந்துவிட்டு, ஏமாற்றியது தெரியவந்தது. அவர், தனது தவறான செயலுக்கு அவரது கார் ஓட்டுநர்களான காவலர்களையும் பயன்படுத்தி வந்தது உறுதியானது. “மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, நீங்கள் இன்ஸ்பெக்டருக்கு என்ன வேலை பார்த்திருக்கீங்கன்னு பச்சையா சொல்லவா?” என அந்த காவலர்களை, உயரதிகாரிகள் கடுமையாக கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகள், இணை கமிஷனருக்கு அளித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து இணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி, கமிஷனர் அருண் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
பணியின்போது ஒழுங்கினமாக நடந்ததால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனருக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்ஸ்பெக்டர் கண்ணன், சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான அறிவிப்பாணையையும் அவரது வீட்டில் காவலர்கள் அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் மயக்கி திருமணம் ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்திய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu