BIG STORIES
காதல் பஞ்சாயத்து விவகாரம்.. பூவை ஜெகன்மூர்த்தி எங்கே..? சிறுவன் கடத்தல் வழக்கு பின்னணி..! காவல் அதிகாரி வாகனம் சிக்கியது
Jun 15, 2025 02:31 AM
104
காதல் பஞ்சாயத்து விவகாரம்.. பூவை ஜெகன்மூர்த்தி எங்கே..? சிறுவன் கடத்தல் வழக்கு பின்னணி..!
திருவள்ளூரில் காதல் திருமணம் செய்து தலைமறைவான பெண்ணை மீட்க , காதலனின் தம்பியை கடத்திய புகாரின் பேரில் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ வை விசாரிக்க சென்ற போலீசாரிடம், விசாரணை நடத்த எதற்கு இவ்வளவு போலீசார் என்று கூறி உள்ளே விடாமல் வீட்டைப்பூட்டிக் கொண்டு ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 6 மணி நேர போராட்டத்தில் போலீசாருக்கு காத்திருந்த் டுவிஸ்ட் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த கலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய்ஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் காதலனை தேடி வந்த விஜயஸ்ரீ மே மாதம் 21 ந்தேதி காதலன் தனுஷை பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது தற்போதுவரை தெரியாத நிலையில், பெண் வீட்டார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏடிஜிபி ஒருவரது அலுவல் பணிக்கு பயன்படுத்தகூடிய வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற மர்மக்கும்பல் ஒன்று, காதலனின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடி எங்கே என்று கேட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்த நிலையில், தனுஷின் 17 வயது தம்பியை தாக்கி ஏடிஜிபியின் காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றதாகவும், பெண்ணை கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு சிறுவனை அழைத்துச்செல்ல கூறியுள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் வாகனத்தில் சிறுவன் கடத்தல் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடத்தப்பட்ட சிறுவனை சில கிலோ மீட்டர் தூரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டு தப்பியது. இந்த புகார் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் காவல் அதிகாரின் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் கடத்தல் தொடர்பாக மகேஸ்வரி என்ற பெண் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தேனியை சேர்ந்த இளம் பெண்ணின் உறவினர்கள் காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ரேங்கில் இருக்கும் காவல் உயர் அதிகாரியிடம் காதல் விவகாரத்தை எடுத்துக்கூறி தங்கள் பெண்ணை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. அந்த காவல் அதிகாரியின் சிபாரிசின் பேரில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏவை பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்ததாகவும், அவரது தூண்டுதலின் பேரில் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது மகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து ஆண்டரசன்பேட்டையில் உள்ள பூவை ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்கு நூற்றுக்கணக்கான போலீசார் விசாரிக்க சென்ற நிலையில் விசாரணை நடத்த எதற்கு இவ்வளவு போலீசார் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு போலீசாரை நுழைய விடாமல் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு வீட்டின் முன்பு மறித்து நின்ற ஆதரவாளர்களை அப்புறப்படுத்திய போலீசார் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விசாரணை அதிகாரியை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று தெரிவித்ததால் சுமார் 5 மணி நேர முயற்சிக்கு பின்னர் டி.எஸ்.பி தமிழரசி காவல் ஆய்வாளர் அய்யப்பன் ஆகிய இருவரும் உள்ளே சென்றனர்
அந்த வீட்டிற்குள் பூவை ஜெகன் மூர்த்தி இல்லை என்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் வெளியூர் சென்றிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் இதனை நம்பாமல் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக இரு காவல் அதிகாரிகளும் 1 மணி நேரம் தேடியதாக கூறப்படுகின்றது. பூவை ஜெகன் மூர்த்தி சிக்காத நிலையில், அவர் தலைமறைவானதாக தெரிவித்த போலீசார், அவரை வீட்டில் இருந்து தப்பிச்செல்ல வைப்பதற்காகவே அவரது ஆதரவாளர்கள் போலீசாரை மறித்து நின்றதாக தெரிவித்தனர். இதற்கிடையே கடத்தல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்மணி, தான் ஜெகன் மூர்த்தி மீது புகார் அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்
இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவரது ஆதரவாளர்கள் , காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக தாங்கள் தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்
போலீசார் சுமார் 6 மணி நேரம் பூட்டிய வீட்டு முன்பு நின்று கெடுபிடி காட்டிய நிலையில் அவர்களது கையில் சிக்காமல் பூவை ஜெகன் மூர்த்தி எங்கே சென்றார் ? என்பது போலீசாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகின்றது
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போலீசாரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu