BIG STORIES
'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் வருகிறது.. இனி ஸ்மார்ட்டா இருந்துக்கோங்க.. முன் பதிவு செய்து பார்க்கிங் செய்யலாம்
Jun 16, 2025 01:13 AM
78
'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் வருகிறது.. இனி ஸ்மார்ட்டா இருந்துக்கோங்க.. முன் பதிவு செய்து பார்க்கிங் செய்யலாம்
சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் மாதம் முதல் 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் அமலுக்கு வரும் நிலையில், கட்டணம் செலுத்தாமல் சாலையோரம் வாகனத்தை நிறுத்தினால் மூன்று மணி நேரத்தில் சக்கரத்துக்கு பூட்டு போடப்படும் என்றும் ஆறு மணி நேரம் கடந்தால் வாகனம் காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலையோரம் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டப்படி செப்டம்பர் மாதம் முதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அண்ணா நகரின் பல இடங்களில் சாலைகள் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலுடன், நடைபயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக கும்டா எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் பார்க்கிங் திட்டப்படி அண்ணா நகரின் முக்கிய சாலைகள் , குடியிருப்பு சாலைகள் என 25 கி.மீ நீளம் கொண்ட பகுதியில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாயும் , கார் உள்ளிட்ட லகுரக நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
குடியிருப்பு சாலைகளில் நிறுத்தப்படும் கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்கட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் 100 பணியாளர்களுக்கும் உடலில் பொருத்திக் கொள்ளும் வகையில் கேமராக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அதன் மூலம் கட்டணம் செலுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கும்டா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தாமலோ , அனுமதிக்கப்பட்ட கட்டண நேரம் கடந்த பின்பும் அகற்றப்படாமலோ நிற்கும் வாகனங்களின் சக்கரம் மூன்று மணி நேரத்தில் பூட்டுப் போட்டு பூட்டப்படும் என்றும் 6 மணி நேரத்திற்கு பிறகு அத்தகைய வாகனங்கள் காவல் நிலையத்திற்கு இழுத்து சொல்லப்படும் என்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.
பார்க்கிங் பகுதியை முன்கூட்டியே மொபைல் செயலி வழியாக முன் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது காலியாக உள்ள பார்க்கிங் இடங்கள் பற்றி திரைகளில் ஒளிபரப்பாகும் அறிவிப்புகளை கொண்டு அறிந்து கொள்ளலாம். கட்டணம் வசூலிப்போரிடம் யுபிஐ மூலமாகவோ , ரொக்கமாகவோ பார்க்கிங் செய்யும் முன்பே கட்டணம் செலுத்த வேண்டும்.
தனி நபர்களை ஏற்றிச் செல்லவோ அல்லது இறக்கி விடவோ அண்ணா நகர் வரும் வாகனங்களுக்கு முதல் 10 நிமிடங்களுக்கு பார்க்கிங் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் 10 நிமிடங்களை கடந்தும் ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களுக்கே கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் குடியிருப்பு சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளதால், அபார்ட்மென்ட்களில் வாகன நிறுத்துமிடம் இல்லாதோர் கட்டணம் செலுத்தியே சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியும் என்றும் அவர்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என்றும் கும்டா தெரிவித்துள்ளது. நள்ளிரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை என்று கூறியுள்ள சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், அண்ணா நகரைத் தொடர்ந்து படிப்படியாக சென்னை மாநகர் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu