BIG STORIES
"படத்தின் ஆன்மாவை போச்சு".. கடுப்பான நடிகர் தனுஷ்.. AI ‘ராஞ்சனா’ எப்படி இருக்கு?
Aug 04, 2025 04:21 PM
111
சமீப காலமாக, பிரபல ஹீரோக்கள் நடித்த பழைய திரைப்படங்களை, ரீ-ரிலிஸ் செய்வது என்பது ட்ரெண்டாகி வருகிறது..
இதற்கு பல காரணங்கள் உள்ளன. சில திரைப்படங்கள், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன.
மேலும், சில திரைப்படங்கள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மெருகேற்றப்பட்டு படக்குழுவால் மீண்டும் ரீ-ரிலிஸ் செய்யப்படுகின்றன.
கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, வாலி, புதுப்பேட்டை, குணா உள்ளிட்ட பல பழைய திரைப்படங்கள் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸாகி இருக்கும் ஒருபடம், தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. ஆனந்த் எல்.ராய் இயக்கிய இந்தப் படத்தை தமிழில் டப் செய்து‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த தயாரிப்பு நிறுவனம், புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் நோக்கில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை AI தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்க முடிவுசெய்தது..
ஆனால் அந்த மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்த அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், இது படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும், இது தவறான முன் உதாரணமாகி விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால் அதனை பெரிதும் கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனம், அட்வான்ஸ் தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்தது.
"புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையிலும், அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை படைப்பின் எந்த மாற்றமும் இல்லை. இது ஒரு கலையின் புதிய வடிவம்" என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் திரைப்படம் ரீ-ரிலிஸ் ஆகியிருக்கும் நிலையில், அப்படத்தின் கதாநாயகனான நடிகர் தனுஷும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றப்பட்ட காட்சிகள் படத்தின் ஆன்மாவை கொன்றுவிட்டதாகவும், 12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
ஏஐ மூலம் படத்தின் காட்சிகளை மாற்றுவது சினிமா மரபுக்கான அச்சுறுத்தல் எனவும், வரும் காலங்களில் இதுபோன்ற விஷயங்களைத் தடுக்க விதிமுறைகள் கொண்டு வரப்படும் என நம்புவதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். இதற்கு திரையுலகினரும் அவரது ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ராஞ்சனா படத்தின் உயிரோட்டமே அந்த எமோஷனலான கிளைமாக்ஸ் காட்சி தான். எனவே படத்தின் வெற்றிக்கு கிளைமாக்ஸ் காட்சி பக்கபலமாக இருந்தது என பலரும் கூறியிருந்தனர்.
அதாவது ராஞ்சனா படத்தின் குட்டன் என்ற கேரக்டரில் நடித்திருந்த நடிகர் தனுஷ், க்ளைமாக்ஸில் இறப்பதுபோன்று காட்சி அமைக்கப்படிருக்கும்.
ஆனால் தற்போது ரீ-ரிலீஸில் AI துணையுடன் குட்டன் மீண்டும் உயிர்பெற்று க்ளைமாக்ஸில் Happy Ending-யோடு முடிவதுபோன்று மாற்றப்பட்டுள்ளது. இது தான் இயக்குநர் ஆனந்த் எல்.ராயிக்கும், நடிகர் தனுஷின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
இந்த நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கும் ராஞ்சனா படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும், அதிருப்தி அடைத்திருப்பதாக கூறப்படுகிறது..
Climax-ல் டைலாக் தான் முக்கியம். ஆனால் எந்த டைலாகும் இல்லாமல் AI மூலம் காட்சி படுத்தப்பட்டு வெறும் மியூசிக் போட்டு முடிக்கப்பட்டதால் ரசிகர்கள் அப்செட்டாகி இருக்கின்றனர்.
மேலும் சிலர், இரண்டாம் பாகத்திற்காக இப்படி செய்திருக்கலாம். ஆனால் படத்தின் Climax உணர்வு பூர்வமாகவே இல்லை என சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu