BIG STORIES
உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ. கொடூரக்கொலை.. எம்.எல்.ஏ.வின் தென்னந்தோப்பில் நடந்தது என்ன? ..
Aug 06, 2025 11:37 AM
51
உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ. கொடூரக்கொலை.. எம்.எல்.ஏ.வின் தென்னந்தோப்பில் நடந்தது என்ன? ..
திருப்பூர் உடுமலை அருகே நள்ளிரவில் எஸ்.எஸ்.ஐ. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நடந்த கொடூர சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிக்கனூத்தில் மடத்துகுளம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமாக 40 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது.
அந்த தென்னந்தோப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது இரு மகன்களான தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரும் 2 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை தொடர்பாக தந்தை மூர்த்திக்கும் மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டனுக்கு இடையே நேற்று இரவு தோட்டத்தில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தகராறு முற்றிய நிலையில், தந்தை மூர்த்தியை மகன்கள் இருவரும் தோட்டத்துக்குள் வைத்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மூர்த்தியின் அலறல் சப்தம் கேட்ட நிலையில், அருகாமையில் உள்ளவர்கள் போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் ரோந்து வாகனத்தில் சிக்கனூத்துவில் உள்ள எம்.எல்.ஏ.வின் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் சென்ற ரோந்து வாகனத்தை ஆயுதப்படை காவலர் அழகுராஜ் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னந்தோப்பிறகு சென்ற எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், தந்தை மூர்த்தியை வெட்டிய மகன்கள் மணிகண்டன் மற்றும் தங்கபாண்டியை கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.யிடம் தங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட வேண்டாம் என தங்கபாண்டியும், மணிகண்டனும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் தங்கபாண்டியும், மணிகண்டனும் சேர்ந்து எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆயுதப்படை காவலர் அழகுராஜையும் இருவரும் சேர்ந்து வெட்டிய நிலையில் அவர் மட்டும் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனையடுத்து தந்தை மூர்த்தியும், மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் தப்பி ஓடினர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. கிரீஷ் யாதவ் உத்தரவின் பேரில், ஆறு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்த எம்.எல்.ஏ. மகேந்திரன், தனது தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். மேலும், கொலை செய்த நபர்களின் ஆதார் ஆவணங்கள், தொலைபேசி எண்களை போலீசாரிடம் வழங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu