BIG STORIES
120 சவரன் நகை.. ரூ.20 லட்சம் .. இன்னோவா கார் போதாதாம்..! ரூ.50 லட்சம் கூடுதலா கேட்டு டார்ச்சர்..! பறிபோன ஐடி பெண் ஊழியர் உயிர்
Aug 07, 2025 01:21 AM
81
120 சவரன் நகை.. ரூ.20 லட்சம் .. இன்னோவா கார் போதாதாம்..! ரூ.50 லட்சம் கூடுதலா கேட்டு டார்ச்சர்..!
திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையத்தில் 50 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக திருமணம் முடிந்த 10 மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த ரிதன்யா வழக்கின் சோகமே அடங்காத நிலையில், திருப்பூரில் பிரீத்தி என்ற ஐ.டி ஊழியரின் உயிர் வரதட்சணை கொடுமையால் பறிபோனதாக புகார் எழுந்துள்ளது..!
திருப்பூர் - தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம், பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் மகள் பிரீத்தி. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- உமா தம்பதியரின் மகனான ஆர்கிடெக்ட் சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 120 பவுன் நகை, 20 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்த நிலையில், பிரித்தியின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் பிரீத்திக்கு வந்துள்ளது. அதனை பெற்றோர் பிரீத்தியின் பெயரில் வங்கியில் செலுத்திய நிலையில், அதனை வரதட்சணையாக தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கணவர் சதீஷ்வரும், மாமனார் மற்றும் மாமியாரும் கேட்டு நச்சரித்து வந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் பிரீத்தியின் பெயரில் இருக்கும் வீடு மற்றும் இடத்தை விற்று அதன் மூலமாக பணத்தை கொண்டு வர கோரியும் சதீஷ்வர் கேட்டதாகவும் , இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவர் வீட்டில் இருந்து பிரீத்தி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த வந்த பிரீத்தி செவ்வாய்கிழமை மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு உயிரைமாய்த்துக் கொண்டார். அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சதீஷ்வர் குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் வந்த கார்களை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்
பெண்ணின் கணவர் சதீஷ்வர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரேதத்தை பெற்றுக் கொள்வோம் , அதுவரை பிரீத்தியின் சடலத்தை வாங்கப்போவதில்லை என்று ஆதங்கம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய கமிஷ்னர் ராஜேந்திரன் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார். திருமணமாகி 10 மாதத்திற்குள் பிரீத்தி உயிரை மாய்த்துக் கொண்டதால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
படித்து நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் கூட தங்களுக்கு புகுந்த வீட்டில் இழைக்கப்படும் வரதட்சணை கொடுமை போன்ற குடும்ப வன்முறை அநீதிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக போராடாமல் உயிரை மாய்த்துக் கொள்வது துரதிர்ஷடவசமானது என்று சுட்டிக்காட்டும் சட்ட வல்லுனர்கள், தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu