BIG STORIES
வர்றாங்க தோண்டுறாங்க... பைப் லைனை உடைக்கிறாங்க.. திரும்பவும் வர்றாங்க தோண்டுறாங்க.. ரிப்பீட்டால் டென்ஷன் ஆன பப்ளிக்!
Aug 08, 2025 05:01 PM
85
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் என சாலையை தோண்டி குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர்! பாதாள சாக்கடை இணைப்புகள் முழுமையாக கொடுக்கப்படாத நிலையில் தார் சாலைகளை அமைக்கின்றனர்! இணைப்பு கொடுக்க மீண்டும் சாலைகளை உடைக்கின்றனர். இதுபோன்ற, பணிகளால் மக்கள் வரிப்பணம் வீணாகி, மாநகராட்சியின் செயல்பாடுகளும் தேக்கம் ஏற்படுகிறது என குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள். இப்படி, ஒரே பகுதியில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் குறித்து பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், 55 வது வார்டு தியாகராஜ நகர் விரிவாக்கப் பகுதியில், குமரேசன் நகர் உள்ளது. இங்கு, மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை இணைப்புகள், ஒவ்வொரு வீடு வீடாக கொடுப்பதற்கு முன்பாகவே, அதிகாரியின் மூலம் தார் சாலைகள் போடும் பணி நடைபெற்று வருகிறது, என கூறப்படுகிறது.
இதனால், இணைப்பு கொடுக்காத வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்க புதிய தார் சாலைகளை உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் ஆங்காங்கே காண முடிகிறது. இதற்கிடையே அடிப்படையான குடிநீர் தேவைக்கு ஆதாரமான குடிநீர் பைப்புகள், பாதாள சாக்கடைக்கு தோண்டும்போது உடைபடுகிறது. இதன் காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான், வார்டில் மக்களுக்கு குடிநீர் சப்ளை வழங்கப்படும் நிலையில், குடிநீர் குழாய் சேதமாவதால் குடிநீர் சப்ளை ஒரு வார கால தாமதம் ஆகி விடுகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தார் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள், ஒரே நேரத்தில் நடைபெறுவதால் இதனை கண்காணிக்க மாநகராட்சி பொறியாளர் களத்தில் இருக்க வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால், சரி செய்ய பிளம்பர் ஒருவரும் பணிகளின்போது இருக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில், இதே வார்டில் ரூபாய் 2 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சிறிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 13.06.25 அன்று சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்து வைத்தார். ஆனால் மறுநாளே, இங்கே ஏற்பட்ட துக்க நிகழ்வில் இறுதிச்சடங்கு நடத்துவதற்காக நீர்தேக்க தொட்டிக்கு வந்தபோது, தண்ணீர் வரவில்லை, மோட்டாரும் இயங்கவில்லை. திறந்து 2 மாதங்களில் நான்காவது முறையாக பழுது ஏற்பட்டு, சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. எனவே, பப்ளிசிட்டிக்காக மட்டும் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.
இதே, குமரேசன் நகர் பகுதியில் கடந்த 2015 -16 ம் ஆண்டு அம்ரித் திட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா காலை, மாலை அதிகமான மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், பார்க்கில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் நிறைய சேதமான நிலையில், இதுவரை மாநகராட்சியால் சரி செய்யப்படவில்லை. அதேநேரம், மாலையில் பெண்கள் பார்க்கில் செல்ல முடியாதவாறு மின்விளக்குகள் எரிவதில்லை. இதனையும் சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu