முகப்பு
''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
Aug 09, 2025 02:29 PM
33
ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை இந்தியா தாக்கி அழித்ததாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான மோதலின்போது இந்தியா எவ்வாறு வெற்றிகரமாக தாக்குதலை முன்னெடுத்தது, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஏன் முன்வந்தது என்பதையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்...
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகளையும், அவர்களது உட்கட்டமைப்புகளையும் இந்தியா ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி அழித்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், விமானப்படையின் 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம்.கத்ரேவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. அதில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி. சிங், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இவற்றில் ஒரு விமானம் மிகப்பெரிய அளவிலான ராணுவ விமானம் என்றும் குறிப்பிட்டார். அந்த பெரிய விமானம் ELINT எனப்படும் உளவு விமானமாகவோ அல்லது AEW &C கண்கணிப்பு விமானமாகவோ இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக கூறிய விமானப்படை தளபதி ஏபி சிங், இதுவரை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கு தாக்கி அழிக்கப்பட்டதில், அந்த தொலைவு என்பது மிக அதிகம் என்றும் அது ஒரு சாதனை என்றும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானின் ஷாபாஸ் ஜகோபாபாத் விமான தளம் தாக்கப்பட்டதில் அங்கு F-16 விமானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதால், அங்கிருந்த விமானங்கள் சேதமடைந்திருக்கும் என்றும் ஏ.பி. சிங் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுடனான மோதலின்போது ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் வாங்கிய எஸ்-400 அமைப்பு கேம் சேஞ்சராக இருந்ததாக ஏபி சிங் கூறினார். எஸ்-400 அமைப்பின் தாக்குதல் திறன், பாகிஸ்தானிடம் உள்ள நீண்ட தூர இலக்கை தாக்கும் குண்டுகள், போர் விமானங்கள் ஆகியவற்றை இந்தியாவிற்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் 80 முதல் 90 மணி நேரம் நடந்த மோதலில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு இந்தியா அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஏபி சிங், மோதல் தொடர்ந்தால் தாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்திருந்ததாகவும் கூறினார். இதுவே பாகிஸ்தான் இந்தியாவிடம் போர் நிறுத்த கோரிக்கையை முன்வைக்க காரணமாக இருந்ததாகவும் விமானப்படை தளபதி விளக்கமளித்தார்.
ஆப்ரேசன் சிந்தூரின்போது பாதுகாப்புப்படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் கூறிய அவர், எவ்வாறு தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? எவ்வாறு திட்டமிட வேண்டும்? என்பதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் ஏபி சிங் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பாதுகாப்புப்படையினர் ஒருங்கிணைந்து செயல்பட பெரும் பங்களிப்பு அளித்தார் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை திரையில் காண்பித்து விமானப்படை தளபதி ஏபி சிங் விளக்கினார்.
இந்தியாவிடம் செயற்கைக்கோள் படங்கள் மட்டுமல்ல, உள்ளூர் ஊடகங்களிலிருந்தும் படங்கள் கிடைத்ததால் துல்லியமாக தாக்குதல் நடத்த முடிந்ததாகவும் விமானப்படை தளபதி விளக்கமளித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu