முகப்பு
காதலியை கடத்த காதலன் காருடன் காட்டிய சாகசம்.. “களவாணி” பாணியில் சம்பவம்..!
Aug 10, 2025 01:58 AM
250
“களவாணி” பாணியில் சம்பவம்
அரியலூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தில் சகோதரி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணை களவாணி திரைப்பட பாணியில் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல வந்து காதலன் காரில் கடத்திச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியை பூர்வீகமாக கொண்ட குமரேசன் என்பவருக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வந்த குமரேசன், ஊருக்கு திரும்பிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காதலியை நேரில் சந்தித்துள்ளார். பின்னர் இளைஞர் தனது சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு காதலியை அழைத்துச்சென்ற நிலையில் காதல் ஜோடியை ஏற்க மறுத்து குமரேசனின் பெற்றோர் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குமரேசனும் - அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள மூத்த சகோதரி ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு அலைபேசி மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து களவாணி படத்தில் வருவது போன்று நண்பரின் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு சென்றுள்ளார் காதலன் குமரேசன்.
தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் மூவரை அனுப்பி, அனுசுயா தங்கி இருக்கும் வீட்டை அடையாளம் கண்டுள்ளனர். திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்த படியே அவரது நண்பர்கள் நடந்து சென்றுள்ளனர்.
குமரேசன் காருக்குள்ளேயே அமர்ந்திருந்திருந்ததாக சொல்லப்படுகின்றது. தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுசியா, காதலனின் நண்பர்களை கண்டதும் தயாரான நின்ற அந்த காரில் ஏறி தப்பிச் சென்றார் . இதனைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி, கூச்சல் எழுப்பியுள்ளார்.
குமரேசனின் நண்பர்கள் , தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது. அனுசுயா காரில் ஏறிய அடுத்த நொடி புழுதி பறக்க கார் புறப்பட்டு செல்வதை தெருவாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வருவதாக கூறி அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர்.
உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவிர்கள் அளித்த கடத்தல் புகாரின் பேரில் கீழப்பழுவூர் காவல்துறையினர், தீவிர விசாரணை செய்து கையில் கத்தியுடன் காரில் ஏறி தப்பியவர்களை தேடி வந்தனர். இதற்கிடையே அனுசுயாவுக்கும், குமரேசனுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாகவும் அவர்கள் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu