BIG STORIES
“இங்கிலீஸ் படம் மாதிரி.. கேட்டல்ல”.. கட்டிலில் கைகளை கட்டிப்போட்டு ரவுடியை வதம் செய்த பெண்..! திறமையாக துப்புதுலக்கிய போலீஸ்
Aug 10, 2025 02:08 AM
496
ரவுடியை வதம் செய்த பெண்
திருவள்ளூர் ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதறி ரவுடி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கட்டிலில் கட்டிபோட்டு கழுத்தை நெரித்தும் நெஞ்சில் மிதித்தும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்று தண்டவாளத்தில் வீசியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்- புட்லூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கடந்த ஜூன் மாதம் ஆண் சடலம் ஒன்று உடல் சிதறி கிடந்தது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அது டாஸ்மாக் குடோனில் வேலை செய்து வந்த அரவிந்த் மேத்யூ என்பது தெரியவந்தது. அவரே உயிரை மாய்த்துகொண்டாரா? அல்லது தண்டாவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி பலியானாரா? என ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில் அரவிந்த் மேத்யூவின் தந்தை தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யபட்டிருக்கலாம் என்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் புதிய கோணத்தில் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.
பிரேத பரிசோதனையில் அரவிந்த் மேத்யூ கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அரவிந்த் மேத்யூ குறித்து விசாரணை நடத்தியதில் அவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போன்ற ரவுடித்தனமான செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அவரது செல்போனில் உள்ள கால் ரெக்கார்டு விவரங்களை ஆய்வு செய்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் அரவிந்த் மேத்யூவை கொலை செய்ததாக அயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி பாண்டியனின் மனைவியான உஷாவிற்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளதும் பாண்டியன் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் 17 வயது சிறுவனுடன் குடித்தனம் நடத்தி வருவது தெரியவந்தது.
உஷா, திருவள்ளுரில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய நிலையில் தனது தோழியின் வீட்டிற்கு அடிக்கடி உஷா வந்து சென்றுள்ளார். அங்கு செல்லும் போதெல்லாம் அரவிந்த் மேத்யூ அவரை மடக்கி கிண்டல் செய்வதும், பணம் கேட்டு மிரட்டுவதையும் வழக்கமாக்கி உள்ளான். மேலும் எனக்கு இது கிடைக்குமா என்று டபுள் மீனிங்கில் பேசி உல்லாச அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உஷா திருவள்ளூர் புட்லூர் ரயில் நிலையம் அருகே குடியேற முடிவு செய்ததாகவும், அங்கு சென்றால் அரவிந்த் மேத்யூ தொல்லை கொடுப்பான் என்று தன்னுடன் குடித்தனம் நடத்திவரும் 17 வயது சிறுவனிடம் உஷா தெரிவித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த உஷாவின் நண்பரான, ஜிம் உரிமையாளர் பால்ராஜ் என்பவரும் அரவிந்தை கண்டித்துள்ளார். அதற்கு பின்னரும் கேட்காமல் பல முறை போதையில் உஷாவிடம் போன் செய்து உன்னோடு இருக்க வேண்டும் எனக்கேட்டு நச்சரித்ததால், அரவிந்தை பழிவாங்க பால்ராஜ் மற்றும் உஷா திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த ஜூன் 18 ஆம் தேதி உஷா, அரவிந்திற்கு போன் செய்து நீ நச்சரித்து கொண்டே இருந்ததால் நான் அதற்கு சம்மதிக்கிறேன், இந்த ஒரு முறை தான், இனி தொந்தரவு செய்யக்கூடாது சீக்கிரம் வீட்டுக்கு வா எனவும், தோழியும் வருகிறாள் அவளுக்கும் சேர்த்து கூடுதலாக பீர் வாங்கி வா” என அழைத்துள்ளார்.
டாஸ்மாக் குடோனில் வேலை செய்து வந்த மேத்யூ வேலையை பாதியில் விட்டு விட்டு கையில் பீர் பாட்டிலுடன் உஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அரவிந்த் மேத்யூவும், உஷாவும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். இரண்டு பீர்களை முழுவதுமாக குடித்து போதை தலைக்கேறிய நிலையில் அரவிந்த் ஆங்கில படங்களில் வருவது போல உன்னோடு உறவு கொள்ள வேண்டும் என உஷாவிடம் அடம்பிடித்துள்ளான்.
இதனை தனக்கு சாதகமாக்கிய உஷா, அவனது கை, கால்களை கட்டிலோடு கட்டிப்போட்டதாக தெரிகிறது. உடைகளை களைந்து விட்டு , உஷா செல்போனில், ஜிம் உரிமையாளர் பால்ராஜ், 17 வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரர் , பால்ராஜின் நண்பர் உள்ளிட்ட 4 பேரை வீட்டிற்கு வரவழைத்தார்.
கட்டிலில் போதையில் படுத்து இருந்த அரவிந்த் மேத்யூவை, அவர்கள் சுடிதார் துப்பட்டாவில் கழுத்தை நெரித்தும், நெஞ்சில் ஏறி மிதித்தும் கொலை செய்ததாகவும், சடலமாக கிடந்த அரவிந்த் மேத்யூவின் காலில் மிதித்தபடி 17 வயது சிறுவன் செல்பி எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. மதியமே கொலை செய்துவிட்டாலும், சடலத்தோடு இரவு வரை காத்திருந்துள்ளனர்.
பிறகு உடலை என்ன செய்யலாம் என திட்டமிட்டு பைக்கில் நடுவில் தூக்கி வைத்து கொண்டு திருவள்ளூர் - புட்லூர் ரயில் தண்டவாளத்தில் வீசி விட்டு தப்பினர். இதில் பால்ராஜ் மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடி விட்ட நிலையில் மற்றவர்களும் தலைமறைவாகியுள்ளனர். ஒரு வாரகாலமாக ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி இந்த கொலை கும்பலை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ரெயில்வே போலீசார் , பிரேதபரிசோதனை அறிக்கை தொடங்கி , செல்போன் உரையாடல்கள், செல்போன் அழைப்புகள் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக அனுகி , துப்பறிந்து இந்த 3 கொலையாளிகளையும் தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்திருப்பதாகவும், இருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu